“ அம்புலி 3 D “ படத்தின் இயக்குனர் ஹரிஷ் நாராயண் அவர்களின் சிறப்பு பேட்டி தொடர்கின்றது :
வலைபதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டி தந்த அவர்களின் நல்ல மனதை தமிழ் பதிவர்கள் சார்பாக பாராட்டி வணங்குகின்றேன் .
1. அஜித் – விஜய் இருவரும் ஒரே சமயத்தில் ஒரு படம் இயக்க அழைத்தால் யார் அழைப்பை ஏற்ப்பிர்கள் ?
- சபரி I B.E அண்ணாமலை பல்கலைகழகம்
Expendibles படத்தில் அத்தனை பெரிய ஆக்ஷன் ஹுரோக்களும் ஒன்றாய் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து படைத்திருக்கிறார்கள்... அதே போல், தமிழ் திரையுலகில் முதல்முறையாக இரண்டு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து மிரட்டும் முதல் 3D படம் என்ற ப்ராண்டிங்கை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்வேன். கதையும் ரெடியாக இருக்கிறது...
2. உங்களின் அடுத்த படம் என்ன ?
- ராஜராஜன் – START SYSTEM COMPUTERS , MELAIYUR
அம்புலி இரண்டாம் பாகத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆனால், தொழில்நுட்ப ரீதியாய் அப்படித்திற்கு ஒரு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன்பிறகே அதை தொடர வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதற்கிடையில், இன்னொரு படத்தை முடித்துவிடலாம் என்று அம்புலி தயாரிப்பாளரே கூறியிருக்கிறார். எனவே சூடாக ஒரு ஸ்க்ரிப்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது... அதுவும் நிச்சயம் குடும்பத்தோடு கண்டு ரசிக்கக்கூடிய ஒரு படமாய் அமைய எல்லா முயற்சியும் செய்துக் கொண்டிருக்கிறோம். அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் நிச்சயம் பகிர்கிறேன்.
3. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தமிழ் சினிமாவில் இப்போது வரும் படங்களில் 95% குப்பை தானே ? ஏன் ?
- நகுலன் - START SYSTEM COMPUTERS
குப்பை என்பதற்கு பதிலாய் 'பழைய புத்தக கடையாக' இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம், புது புத்தகங்கள் நல்ல விலைக்கு போகும், ஆனால், பழை புத்தகங்கள் எடைக்குத்தான் போகும். மக்களில் பலர் திரைப்படங்களை எடைக்குத்தான் வாங்கி பார்க்கிறார்கள் (திருட்டு விசிடி) புத்தகத்தின் விலையை முழுதாய் கொடுக்க மக்களில் பலர் தயாராய் இல்லை... (எல்லோரையும் குறிப்பிடவில்லை..) பழைய புத்தக கடையில் ரொம்ப நேரம் தேடினால்தான் நல்ல புத்தகம் கிடைக்கும். தேடிப்பாருங்கள் நகுலன்... ப்ளீஸ்..
4. உங்களை போல சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு நிங்கள் தரும் அறிவுரை என்ன ?
கர்ணன் – உடற்கல்வி ஆசிரியர் , மேலையூர்
அம்புலிக்கு பிறகு நிறைய இளம் இயக்குனர்கள் என்னிடம் உதவி இயக்குனராய் சேர வருகின்றனர். உதவி இயக்குனராய் சேர ஒரு காலத்தில், ரசனையும், ஆர்வமும் மட்டுமே போதுமான தகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில், ஒரு செல்ஃபோனில்கூட படம் எடுக்கக்கூடிய அசாத்திய திறமை தேவைப்படுகிறது. இதை நான் அவர்களிடமும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், நான் எதிர்ப்பார்க்கும் சில தகுதிகள் வெகுசிலரிடமே இருக்க காண்கிறேன். உதவி இயக்குனர் என்று மட்டுமில்லை... நாளைக்கு அவர்களே ஒரு நல்ல வெற்றிப்பட இயக்குனராக மாறுவதற்கும் எனக்கு தெரிந்த சில ஆலோசனைகள் அல்லது பயிற்சிகள் இதோ...
1. தமிழ் சரளமாக பேச, படிக்க, எழுத தெரிந்து கொள்ளவும். அதற்கு பயிற்சியாய், ஒரு முழுநாவலை ஏற்ற இறக்கங்களுடன் நடித்தபடி படித்துக் காட்ட பழகவும். நாவல் சிரமம் என்றால் சிறுவர் கதை புத்தகங்களும் பரவாயில்லை. குறிப்பாக காமிக்ஸ்-ஓ அல்லது கிராஃபிக்ஸ் நாவலோ பழகினால் ஸ்டோரி போர்டிங் சுலபமாகிவிடும். இண்டர்நெட்டில் இலவசமாய் பல காமிக்ஸ்கள் கிடைக்கிறது. நிச்சயம் முயற்சிக்கவும்.
2. ஒரு பக்க கதைகளை நிறைய எழுதிப் பழகுங்கள்... அல்லது பிறர் எழுதி வார இதழ்களில் வெளியான வித்தியாசமான ஒரு பக்க கதைகளை காட்சிப்படுத்திப் பார்த்து பழகுங்கள்.... முடிந்தால் மொபைல் கேமிராவில் நண்பர்களை நடிக்க வைத்து ஷூட் செய்து பார்க்கவும்.
3. இண்டர்நெட்டிலும், நூலகங்களிலும் சென்று எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து தேடிப்படித்து ரிப்போர்ட் ரெடி செய்து பழகுங்கள். உங்கள் பிரத்யேக கதைகளில் வரும் சில விசேஷ தலைப்புகளை R&D செய்ய இது உதவும்
4. தமிழ் டைப்பிங் (கணிணி அறிவுடன்) நிச்சயம் கற்றுக் கொள்ளுங்கள்... (நம்புங்கள்... துறையில் இந்த தகுதி வெகு சிலரிடமே உண்டு)
5. ஆங்கிலம் ஏதோ பெரிய பூதம் என்று பயந்து விலகாதீர்கள். அடிப்படை ஆங்கில அறிவு பழகுங்கள் (கணிணியும்... டைப்பிங்கும் உட்பட) இலவசமாக கஸ்டமர் கேர் நம்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்களிடம் சில அடிப்படை கேள்விகள் கேட்டு ஆங்கிலத்தில் பேசி பார்க்கவும். நிச்சயம் கற்றுக் கொள்ளலாம்....
6. (இது கட்டாயமல்ல) 'ஃபோட்டோஷாப்' பழகுங்கள். இது தெரிந்தால் நீங்கள் நாளை எடுக்கப்போகும் காட்சியை வெவ்வேறு ஃபோட்டோக்களை வைத்து அடுக்கிப் பார்த்து லைட்டிங் பேட்டர்ன் முதற்கொண்டு ரெடி செய்யலாம்.
7. லேட்டரல் திங்கிங் முக்கியம்... எந்த ஒரு விஷயத்தையும் வெவ்வேறு கோணங்களில் அணுகி விடையளித்து பாருங்கள்... செஸ் கேம் போல...சில சமயம் சிறு பிள்ளையாய் யோசித்தாலும் பரவாயில்லை...
8. ஒத்த கருத்துடைய ஒரு நண்பருடன் சேர்ந்து... தினமும் ஒரு படம்பார்த்து அந்த படத்தை பற்றி அலசி ஆராய்ந்து பேசுங்கள். டிக்கெட் செலவு செய்து அரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்றில்லை... டிவியில் போடும் பழைய கிளாசிக் வகை படங்களையும் (நிச்சயம் தமிழ்ப்படமும்மதான்) ஆய்வுக்காக பார்க்கலாம்...
9. தினமும் அடிக்கடி நிறைய பாடல்களை கேளுங்கள். பாடலின் டைமிங்... எங்கு வரிகள் கவனிக்கப்படுகிறது... எங்கு இசை ஆக்கிரமிக்கிறது... எங்கு பாடகரின் குரலை ரசிக்க முடிகிறது போன்ற விஷயங்களை அனுபவியுங்கள்.
10. முக்கியமான ஒரு திறன்... 'இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்..' அல்லது 'இதெல்லாம் எனக்கு எதற்கு' என்று எதையும் ஒதுக்காதீர்கள் 'அட்டே..! இது புதிதாக இருக்கிறதே... இதை எப்படி செய்வது...' என்று ஆர்வமாய் கேட்டு கற்றுக் கொள்ளும் சகஜத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஜூனியரிடமிருந்து கற்றுக் கொள்வதாய் இருந்தாலும் சரி...
(குறிப்பு.: இங்குள்ளவை என்னிடம் உதவி இயக்குனராக சேர நான் எதிர்ப்பார்க்கு கட்டளைகள் அல்ல... நான் இயக்குனராவதற்கு முன்பு என்னை தயார்படுத்திக் கொள்ள நானே வரைந்து கொண்ட வழிமுறைகள் மட்டுமே...)
5. இந்த வெற்றியை அடைய நிங்கள் இழந்தவை என்ன ? என்ன ?
இளையராஜா – INDUSIND BANK , SIRKALI
மனதிற்கு பிடித்து வந்த துறையென்பதால் எனது இழப்புகளை நான் பொருட்படுத்தவில்லை... ஆனால், என் தந்தையின் நண்பர்கள் சிலர் அவரவர் மகன்களை மகள்களைப் பற்றி பெருமை பேசும்போது, என் தந்தையால் நான் ஜெயிக்கும் வரை பேசாமலிருக்க வைத்த அந்த மௌன நிமிடங்களையே பெரிய இழப்புகளாக கருதுகிறேன். பலமுறை அவர் அந்த நிமிடங்களில் என்னிடம் வருத்தப்பட்டதுண்டு... ஆனால், இன்று அந்த மௌனங்களை மேளதாளங்களாக மாற்றக்கூடிய எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.
6. எல்லா படங்களிலும் பெண்களை ஒரு போக பொருளாகவே காட்டுகின்றனர் , அப்படி இல்லாமல் பெண்ணை மையபடுத்தி நிங்கள் ஒரு படம் எடுப்பிர்களா ?
- பூங்கோதை – சத்துணவு அமைப்பாளர் , திருவெண்காடு
நான் சினிமாவுக்காக எழுதி வைத்திருந்த முதல் திரைக்கதையே ஒரு பெண்ணை மையப்படுத்தியதுதான். 'டெய்ஸியின் டயரியிலிருந்து கடைசி 4 பக்கங்கள்...' என்ற ஒரு கதை... 'டெய்ஸி' என்ற ஒரு பெண்-நிருபரின் துப்பறியும் திறன் குறித்த கதை அது. முழுக்க முழுக்க அவளது எண்ணங்களின் காட்சிப்பதிவாய் கூடிய ஒரு த்ரில்லர் கதை... நிச்சயம் வருங்காலத்தில் எடுப்பேன்...
7. இந்த படத்தை பார்த்த பின் உங்கள் பெற்றோர்கள் கருத்து என்ன ?
- ரா. சக்தி , மேலையூர்
அப்பா அம்மா மற்றும் எனது பாட்டி மூவரும் இப்படத்தை நான்கு தடவை பார்த்தார்கள். அரங்குகளில் குடும்பத்தோடு வரும் மக்கள் கூட்டமும், குறிப்பாக குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்துக் கொண்டே படத்தை பார்ப்பதும் அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. இப்படியே அனைவரும் குடும்பத்தோடு வந்து கொண்டாடும்படி படத்தை நிறைய எடு... என்று எனக்கு அன்புக்கட்டளையிட்டார்கள். நிச்சயம் கட்டளையை நிறைவேற்றுவேன்.
இந்த வளரும் குழந்தை பதிவருக்கு பேட்டி அளித்த இயக்குனருக்கு நன்றி
டிஸ்கி : அன்பு நண்பர் சம்பத் அவர்களின் tamilparents மற்றும் மயிலனின் மயிலிறகு வலை தளம் இந்த வார என் விகடனில் வந்துள்ளது அவருக்கு எங்கள் வாழ்த்துகள்