> என் ராஜபாட்டை : “இதற்கும் வருவோமில்ல… இந்தியாவிலிருந்து!”

.....

.

Thursday, June 23, 2011

“இதற்கும் வருவோமில்ல… இந்தியாவிலிருந்து!”

சீனாவும், ஜப்பானும், நிலவில் தங்களின் தளங்களை அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், அது போன்ற முயற்சியிலிருந்து இந்தியா வெகு தூரத்தில் பின்தங்கி இருக்க முடியுமா? இதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் பதில் கொடுத்திருக்கிறார். “நிலவுக்கு செல்லும் திட்டத்திலிருந்து இந்தியாவால் விலகியிருக்க முடியும் என  நான் நினைக்கவில்லை”
“2015ம் ஆண்டு நிலவுக்கு முதன் முறையாக விண்வெளி வீரரை அனுப்பும் திட்டத்திற்கு  தேவையான தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது” என நாயர் தெரிவித்திருக்கிறார். (இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றது இந்திய விண்கலத்தில் அல்ல. அவர் சோவியத் யூனியனின் சோயுஸ்  என்ற விண்கலத்தின் மூலம் 1984ம் ஆண்டு விண்ணுக்கு சென்று 8 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்).
நிலவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 122 முறை விண்கலங்களை அனுப்பும் முயற்சிகள் நடைபெற்றன. இதில் 59 முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தற்போது பூமியின் அருகில், அதாவது 3 லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரகமான நிலவுக்கு பயணம் மேற்கொள்வதில் புதிய ஆர்வம் பிறந்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நிறுவனங்கள், வரும் 2020ம் ஆண்டுக்குள், நிலவில் தங்களின் தளங்கள் இருக்கும் என அறிவித்துள்ளன. அறிவித்த நிறுவனங்களில் ஆசிய நிறுவனங்களும் இருக்கின்றன.
ஆசியாவிலிருந்து நிலவிற்கு பயணம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளில் ஜப்பானின் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி முன்னணி வகிக்கிறது. நிலவுக்கு ககுயா என்ற விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்த அமைப்புத்தான்.
நிலவுக்கான சாங்கி-1 என்ற, தனது திட்டம் முழுக்க முழுக்க விஞ்ஞான ரீதியிலானது என்றும், எந்த நாட்டுடனும் (ஜப்பான்) போட்டியிடும்  எண்ணம் இல்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ராக்கேஷ் சர்மா
நிலவுக்கு 2015ம் ஆண்டு ஆள் உள்ள விண்கலத்தை அனுப்ப தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில்  1.5 பில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பெரும்பாலான வடிவமைப்பு, ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பணிகள் அடுத்த (2012) ஆண்டுக்குள் நிறைவுபெற்று விடும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலவில் நிரந்தரமாக துணை நிலையம் ஒன்றை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், 1000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, நிலவில் சாத்தியமாகக்கூடிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டபோது, அதிலுள்ள ஒரு திட்டம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அந்தத் திட்டம் என்ன தெரியுமா?  நிலவை வர்த்தகமயமாக்குவது!
பூமியில் வாழ்க்கை நடத்துவதற்கு, நிலவில் கிடைக்கும் கனிம ஆதாரங்களை பயன்படுத்த முடியும் என்றும், அவை மிக இங்கு கிடைப்பதைவிட மலிவாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நிலவிலிருந்து எவற்றை மலிவாகப் பெறலாம்? தூய்மையான எரிசக்தி, சூரிய குடும்பம் மற்றும் வெளிப்புற வளிமண்டலத்தில் மனிதர்கள் ஆய்வு நடத்த மலிவான செலவில் ரொக்கெட் எரிபொருள், விண்வெளிக்கு செல்வதற்கான விண்கலத்தை உருவாக்குவதற்கான கட்டுமானப் பொருட்கள், ஆகியவற்றை நிலவிலிருந்து மலிவாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நிலவில் அலுமினியம், மக்னீசியம், டைட்டானியம், இரும்பு (நிலவில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க) மற்றும் சிலிக்கன் (எரிசக்திக்காக சூரிய தகடுகளை தயாரிக்க) ஆகியன உள்ளன. அத்துடன், நிலவில் உள்ள மண்ணில் அளவுகடந்த ஒக்ஸிஜின் (ராக்கெட் எரிபொருள் தயாரிக்கவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும்)  மற்றும் ஹைட்ரஜின் உள்ளது.
அங்குள்ள மண்ணை உருக்கி, கட்டுமானப் பணிக்கான உறுதியான செங்கற்களை தயாரிக்க முடியும் என்பது மற்றொரு சுவாரசியம்.
அப்பல்லோ விண்கலத்தில் பயணம் செய்த முன்னாள் விண்வெளி வீரரான ஹாரிசன் சிமிட்,  “நிலவில் தொன் கணக்கில் கிடைக்கும் ஹீலியம்-3 வாயுவை, பூமிக்கு திருப்பி விட முடியும், அதன் மூலம் எரிசக்தியை தயாரிக்க முடியும்” என்கிறார். இவ்வாறு தயாரிக்கப்படும்  எரிசக்தி, எண்ணெய் விலையைவிட மலிவாக இருக்கும். ஒரு பாரல் எண்ணையில் இருந்து கிடைக்கும் அதே எரிபொருள் சக்தியைப் பெற 30 டொலர்கள் மாத்திரமே செலவாகும் என்றும் அவர் கூறுகிறார்.
இன்று 1 பாரல் எண்ணையின் விலை 98 டொலர்!
“நிலவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்கள் திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்பட்டால், இங்கிருந்து பார்க்கும்போது நிலவில் புள்ளிகளாக  ரோபோ தொழிற்சாலைகள், பாதாள நகரங்கள், மின் கோபுரங்கள், சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் இடங்கள், விஞ்ஞான கூடங்கள், மயானம் ஆகியவை தெரியும்” என ஸ்பேஸ் என்ற அமைப்பு வாக்குறுதி அளிக்கிறது.
அண்மையில் அமெரிக்காவில் தொழிலதிபர்கள், நில மேம்பாட்டாளர்கள், விண்வெளி தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்ற  நிலவு மேம்பாட்டுக்கான மாநாட்டில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.
மாதவன் நாயர்
விண்வெளிக்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், நிலவில் மனிதர்கள் குடியேறும் கனவு நனவாகும் வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜப்பானில் உள்ள அஸாபு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியரும், விண்வெளி சுற்றுலா நிபுணருமான பட்ரிக் கோலின்ஸ், “ஆண்டுதோறும் விண்வெளி சுற்றுலாவை 100 பில்லியன் டொலர் வருமானம் தரக்கூடிய தொழிலாக மாற்றுவதற்கு, தற்போதுள்ள அரசாங்க பட்ஜெட்களில் 10 சதவீத தொகையே போதுமானது’‘ என்கிறார்.
நிலவுக்கு சுற்றுலா செல்லும் திட்டம் 2010ம் ஆண்டு தொடங்கப்படும் என ரஷ்யாவின் ஃபெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி தொடக்கத்தில் அறிவித்திருந்தது. ஆனால் அது தற்போது 2 ஆண்டுகள் தள்ளிப் போயிருக்கிறது. அடுத்த வருடம் பொதுமக்களுக்காக இத்திட்டம் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவுச் சுற்றுப்பயணத் திட்டம் என்ன?
கலிபோர்னியாவின் ஸ்பேஸ் அட்வெஞ்சர்ஸ் மற்றும் டோக்கியோவை சேர்ந்த டிராவல் ஏஜென்சியான ஜே.டி.பி.யைக் கூட்டாளிகளாக கொண்டு தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின்படி, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் நிலவை சுற்றி வரலாம். நிலவை சுற்றிப்பார்க்க செல்லும் ஒவ்வொரு பயணத்திற்கும் இரண்டு சுற்றுலாப்பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுடன் நன்கு பயிற்சி பெற்ற விண்வெளி வீரரும் உடன் செல்வார்.
ஜப்பானைச் சேர்ந்த ஷிமுசு ஸ்பேஸ் சிஸ்டம் என்ற நிறுவனம், விண்வெளி மற்றும் நிலவில் சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறது. அதன்படி நிலவில், சுருட்டி மடக்ககூடிய கட்டிடங்களை கொண்ட தளங்களை அமைக்கவும், கோல்ஃப் மைதானங்கள், டென்னிஸ் அரங்குகள் ஆகியவற்றை நிலவில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சில தகவல்கள் (அவை சாத்தியமோ இல்லையோ) சுவாரசியமாக இருக்கின்றன. இதோ அவற்றையும் பாருங்கள்.<
நிலவில் அமையவுள்ள ஹில்டன் ஹோட்டல், லாஸ்வேகஸ், நெவேடா ஆகிய இடங்களில் அமைந்துள்ளதைவிட பெரியதாக இருக்கும். ஹில்டன் இன்டர்நேஷனலுக்காக, பிரிட்டனின் புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுனரான பீட்டர் இன்ஸ்டோன்  காம்ப்ளெக்ஸை வடிவமைத்தால், அது மூன்ஸ்கேப் என்ற பெயரில் மின்னும்.
நிலவில் அமையும் ஹில்டன் ஹோட்டலில் 5 ஆயிரம் அறைகள் இருக்கும். சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும். நிலவில் உள்ள ஐஸ் கட்டிகளை கொண்டு தண்ணீர் எடுக்கப்படும். ரெஸ்டாரன்ட்கள், தேவாலயம், கடற்கரை, நிலவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு விருந்தினர்களை ஏற்றிச்செல்ல நிலவு பேருந்துகள் இயக்கப்படும். எப்படிப் போகிறது கதை?
ரஷ்யாவின் SOYUZ TMA-16 விண்கலம்
நிலவை வர்த்தகமயப்படுத்தும் திட்டங்கள் பலவற்றை வைத்திருக்கும் மற்றொரு  அமைப்பு அமெரிக்காவின் டெக்ஸாஸில் அமைந்துள்ள மூன் சொசைட்டி. இந்த அமைப்பு ஆசியாவிலும் விரைவில்  தனது செயற்பாடுகளைத் தொடங்கத் திட்டமிடுகிறது. ஆர்ட்டிமிஸ் சொசைட்டியின் அங்கீகாரம் பெற்ற இந்த அமைப்பு, நிலவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்காக முதன்முறையாக தனியார் நிறுவனத்தால் அமைக்கப்படும் தளத்தை வடிவமைப்பதுடன், அதற்கு நிதியுதவியும் அளிக்கிறது.
நிலவில் மனிதர்களை குடியமர்த்துவது; பெரிய அளவில் தொழில்மயமாக்கத்திற்கு ஊக்கமளிப்பது மற்றும் நிலவில் தனியார் நிறுவனங்களை அமைப்பது ஆகியவைதான் மூன் சொசைட்டியின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
நிலவில் வடக்கு அல்லது தெற்கு பகுதியில் 2024ம் ஆண்டுக்குள் தளம் அமைக்க அமெரிக்காவின் நாசா அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுழற்சி முறையில் எப்படி விண்வெளி வீரர்கள் இருக்கிறார்களோ, அதே போன்று தொடர்ந்து நிலவிலும் ஆண்டு முழுவதும் ஆட்கள் இருப்பார்கள்.
நிலவுக்கு விண்கலங்களை அனுப்பும் தொழிலில் ஏற்கனவே, அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிலவை சுற்றிவருவதற்கு விண்கலத்தை அனுப்புவது, நிலவில் இறங்கும் கலங்கள் அல்லது ரோபோ ரோவர்களை அனுப்பும் முயற்சிகளில், அந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கலிபோர்னியாவை தளமாக கொண்டதும் , ‘அண ஞுணtணூஞுணீணூஞுணஞுதணூடிச்டூ ண்ணீச்ஞிஞு-ண்தூண்tஞுட்ண் ஞிணிட்ணீச்ணதூ‘  என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் ஸ்பேஸ்டேவ் என்ற நிறுவனம், கடந்த வருடம் தமக்கு 17.7 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முதல் ஆண்டைவிட இது 12 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளி தொடர்பான உபகரணங்கள், சேவைகள் ஆகியவற்றின் மூலமே இந்த வருவாய் கிடைத்திருக்கிறது.
“வர்த்தகத்திற்கு நிலவு திறந்துள்ளது’‘ என்ற வாசகத்தை மேற்கோள் வரியாக கொண்டுள்ள ட்ரான்ஸ் ஆர்பிட்டல் என்ற நிறுவனம், நிலவுக்கு வர்த்தக ரீதியாக விண்கலங்களை இயக்க அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை  தாங்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
இந்திய-சீன பொருளாதார வளர்ச்சியை பார்க்கும் போது, சீன அல்லது இந்திய நிறுவனங்களும் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (அப்படி நடந்துவிட்டால் தமிழகத்தில் நிலவு வர்த்தகமும் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்விடுமோ?)

Thanks: viruvirupu.com

5 comments:

  1. மிகவும் சுவாரசியமான தகவல்
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விஞ்சான விஷயங்களை எழுதியதற்கு நன்றி!

    ReplyDelete
  3. அப்படி நடந்துவிட்டால் தமிழகத்தில் நிலவு வர்த்தகமும் அரசியல்வாதிகளின் கைகளுக்குப் போய்விடுமோ?)

    நல்ல கேள்வி கேட்டீர். இந்நேரம்
    அவர்கள் முன் பதிவே பண்ணி
    இருப்பாங்களே

    நல்ல பதிவு பாராட்டுக்கள்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அன்பின் ராஜா - பகிர்வினிற்கு நன்றி - நல்லதொரு காடுரை - நீளம் அதிகம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...