> என் ராஜபாட்டை : அப்பாவி – விமர்சனம்

.....

.

Friday, April 1, 2011

அப்பாவி – விமர்சனம்


சினிமாவுக்கானக் கதைகள் எங்கே இருந்து கிடைக்கின்றன? சில படைப்பாளிகளுக்கு பர்மாபஜாரிலிருந்து. சில படைப்பாளிகளுக்கு நூலகங்களிலிருந்து. அறிவியல் சார்ந்த சிந்தனைகள், அதன் அடிப்படையில் விளையும் கதைகள். வரலாற்று நிகழ்வுகள் , அதைச் சார்ந்த கதைகள் அல்லது அந்த வரலாறுகளே திரைப்படங்களாய். அல்லது முழுக்க முழுக்கக் கற்பனையாக எழுதப்படும் கதைகள். சில படைப்பாளிகளுக்கு – அனுபவங்களிலிருந்து, பொதுவாகத் தன்னைச் சுற்றி நடக்கும் சமூக/அரசியல் அவலங்கள், நேரடியாகச் சந்தித்த விஷயங்கள் போன்றவற்றிலிருந்தும் கதைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டும் இருக்கின்றன. அவை காதல் படமாக இருந்தாலும் சரி சமூக/அரசியல் அவலங்களைச் சொல்லும் படமாக இருந்தாலும் சரி.
கடந்த 25 வருடத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து  வந்து கொண்டிருக்கும் சினிமாக்களில் வரும் கதைகள் “லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அல்லது ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அந்த அரசியல்வாதிகளிடமிருந்து தேசத்தை மீட்கப் போராடும் கதாநாயகன்” .  25 வருடங்களாக அப்படிப்பட்ட படங்கள் வந்து கொண்டிருக்கின்றன, வெற்றி பெற்றும் கொண்டிருக்கின்றன என்பது அப்படிப்பட்டக் கதைகள் தாங்கிய சினிமாக்களின் தேவையைப் பறைசாற்றுவதாகவே இருக்கிறது. தன்னால் செய்ய முடியாத புரட்சிகளைத் தன் தலைவன் கதாநாயகன் செய்கிறான் என்கிற எண்ணத்துடன் அப்படங்களைப் பார்த்து பரவசமடைகிறான் சினிமா ரசிகன். அந்தப் பரவசம் அதைப்போல அடுத்து ஒரு சினிமா வரும் வரையில் தான். அந்தப் பரவசத்தைக் “கேரி ஃபார்வார்ட்”  செய்யும் ஒரு படம்தான் இந்த “அப்பாவி” .
பெயருக்கேற்றார்ப் போலவே, தன்னைச் சுற்றி இருக்கும் கல்வி கற்க இயலாத ஏழைக்குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து அவர்களைக் கலெக்டராக்கி அழகு பார்க்கும் ஒரு அப்பாவி சமூகசேவகரும் ஆசிரியருமான ராமசாமிக்குப் பிறந்த ஒரு அப்பாவி இளைஞன் பாரதி தொடுத்திருக்கும் சமூக/அரசியல் அவலங்களுக்கு எதிரானப் போர்தான் இந்தப் படத்தின் கதை. அத்தகைய அவலங்களைத் தட்டிக் கேட்க ஒரு மாஸ் ஹீரோ தான் வரணும், அல்லது ஒரு சூப்பர்மேன் தான் வரணும் என்கிற ரசிகனின் மூட நம்பிக்கையினை அப்பாவித் திரைப்படத்தின் மூலம் தகர்த்தெறிந்து நானும் கேட்கலாம், நீயும் கேட்கலாம், நாமும் கேட்கலாம் என்கிற நம்பிக்கையினைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் R.ரகுராஜ்.
தேர்தல் பிரச்சாரங்களில் சளைக்காமல் தத்தம் எதிர் அணியினருக்கு “Counter  Attack” – வாய்ச்சொல் வீரர்களாகப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உலகிலேயே ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் இருக்கிறது, இது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்கிற சமீபத்திய புள்ளி விபரத்திற்கு என்ன “Counter Attack”  பதிலடி கொடுக்கப்போகிறார்கள்? . 4வது இடத்தில் இருக்கும் இந்தியாவினை முதல் இடத்திற்குக் கொண்டு செல்வதுதான் எங்கள் லட்சியம் என்று அந்தப் புள்ளிவிபரத்தினை அரைகுறையாகப் புரிந்து கொண்ட ஆனந்த விகடன் ஜோக்குகளில் வரும் அரசியல்வாதி அல்லது கார்டூனிஸ்ட் பாலாவின் படைப்பில் வரும் அரசியல்வாதி வேண்டுமானால் பதில் சொல்லலாம்.
நாளை, நம் நாட்டிற்கு ஏதாவது ஒன்று என்றால் நாம் அனைவருக்கும் தானே பிரச்சினை. நாம் தோளோடு தோள் நின்றால் தானே அதனை முறியடிக்க முடியும்? வெள்ளைக்காரன் காலத்தில் அவனுக்கு விசுவாசமாக இருந்த இந்தியர்களுக்கும் சேர்த்துதான் காந்தி, நேதாஜி போன்றோர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அதைப்போல இன்று ஊழல்/லஞ்சம் போன்றவற்றுக்கு எதிரான போரில் இந்த சமூகம் வெற்றி பெற்று மறுமலர்ச்சி அடைந்தால் அதனால் பயனடைப்போவது அனைவருமே தானே?
“121 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வெண்கலப் பதக்கத்துக்கே மூச்சுத்திணறுகிறது. லட்சக்கணக்குல மட்டுமே மக்கள் தொகை கொண்ட நாடுகள் 100 – 200 னு தங்கப்பதக்கங்களைக் குவிக்கின்றன”
பின்னே என்னங்க இறங்கி விளையாடுறத விட மத்தவங்க விளையாடுறதப் பார்க்கிறது தானே நமக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. அல்லது அது தான் நமக்குப் பிடிக்கிற விஷயம் என்று ஊடகங்களால் திணிக்கப்பட்டு விட்டது.
”இந்தியா வல்லரசு ஆகணும்னா முதல்ல நல்லரசு ஆகணும்”
அதற்கு நல்ல ஆட்சியாளர்கள் வேண்டும்.
“இலவசமா எதையெதையோ கொடுப்பதை விடக் கல்வியைக் கொடு, மற்றதையெல்லாம் அவன் வாங்கிக்குவான்”
“வயதான அரசியல்வாதிகள் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். உங்கள அரசியல விட்டுப் போகச்சொல்லல… உங்க அறிவையும் அனுபவத்தையும் கொண்டு இளம் தலைவனை வழி நடத்துங்கள், நீங்க 4 நாள்ல செய்யுற விஷயத்தை அவன் 4  நிமிஷத்துல செய்வான்”.
சுயநலம் பிடித்த பத்திரிக்கையாளர்களையும் இயக்குனர் விட்டு வைக்க வில்லை. கதாநாயகனிடம் மாட்டிக் கொண்ட பத்திரிக்கையாளர்கள் “நாங்க பிரஸ்” அப்படினு சொல்லும் போது “டிராபிக் போலீஸ்ட்ட சொல்ல வேண்டியது எல்லாம் என்ட்ட சொல்ற..” என்று கதாநாயகன் கேட்பார். அந்தரங்க வீடியோக்களைச் சமூகம் கெட்டுவிடும் என்ற சிந்தனையே இல்லாமல் குடுமபத்தோடு பார்க்கிறார்கள் என்கிற சிந்தனையும் இல்லாமல் பல முறை ஒளிபரப்பிய மீடியாக்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் போர்ச்செய்திகளை/காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பிய ஊடகங்கள் பக்கத்து நாடு இல்ல இல்ல பக்கத்து வீட்டில நடந்த கோரங்களை இருட்டடிப்புச் செய்தது ஏனோ..? உங்கள நினைச்சுப் பெருமைப் பட்டுக்கிட்டிருந்த சக தமிழனுக்கு நீங்கள் கொடுத்த பரிசா..?
சிந்தனையைத் தூண்டும், கதாநாயகன் பேசும் விழிப்புணர்வு வசனங்கள் ஒருபக்கம், சிந்திக்க நேரமே கொடுக்காமல் அரங்கம் அதிரும் அளவிற்குச் சிரிக்க வைக்கும் நெல்லை சிவா மற்றும் வெண்ணிலா கபடிக்குழுச் சூரி பேசும் வசனங்கள் இன்னொரு பக்கம் இப்படிப் படம் முழுவதும் சிறப்பான வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குனர் R.ரகுராஜ். சூரிக்கு ஒரு முறுக்கு ஜோக் , நெல்லை சிவாவுக்கு ”ஐயா, அம்மா யாரையோ காதலிக்கிறாங்கலாம்ல…” … உச்சக்கட்ட  நகைச்சுவை. நெல்லை சிவா ஒரு திறமையான நடிகர் அவருக்கு இந்தப் படத்தில் நல்ல வாய்ப்பு, அருமையாகப் பயன் படுத்தியிருக்கிறர். காமெடி நல்லா வொர்க் அவுட் ஆகணும்னா டைமிங் ரொம்ப முக்கியம். இந்தப் படத்துல அவரோட டைமிங் ஆடியன்சையும் தொற்றிக் கொள்கிறது, சிரித்து மகிழ்வதில்.
“காதலிப்பதை விட எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று தற்கால இளைஞன் அப்பாவிப் பாரதியினைப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடும்.
வழக்கமாக கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் குத்தாட்டம் இந்தப் படத்தில் முதலிலேயே வந்து விடுகிறது அதைப்போலவே அந்த டூயட் பாடலும் முன்பே வந்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருக்கும்.
1000 ஊழல் அரசியல்வாதிகளைச் சுட்டிக் காட்டி மாற்றம் வேண்டும் என்று முழங்கியிருக்கும் அப்பாவி 1 நல்லவரையாவது அடையாளம் காட்டியிருக்க வேண்டும், சுட்டிக் காட்ட இயலாத நிலையில் இருப்பது நமது துரதிஷ்டம்.
“சென்சிடிவ்(Sensitive) விசயங்களைச் சென்சேஷனல் (Sensational) செய்தி/விசயம் ஆக்கி விடுவதே உங்களுக்கு வேலையாப் போச்சு” என்று பிரஸ் மீடியாவைப் பார்த்துக் கேட்கிறான், அப்பாவி. நீங்க மட்டும் என்ன அதத்தானே படமா எடுக்கிறீர்கள் என்று புத்திசாலி பிரஸ்/மீடியா ஆள் கேட்கக் கூடும். என்ன இருந்தாலும், முன்னது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனைச் சாப்பிடவும் கொடுப்பது. பின்னது, சமுதாயம் சீர்பெற வாழைப்பழத்தில் மருந்து வைத்துக் கொடுத்துக் குணப்படுத்தவும் செய்வது, அது இந்த “அப்பாவி”.

Thanks : http://www.mysixer.com

4 comments:

  1. நல்ல விமர்சனம்தான்... ஆனால் உங்களை எலக்சன் கொஞ்சம் படுத்தியதால், வண்டி எங்கெங்கோ போய் சுத்திட்டு வருது...

    http://sagamanithan.blogspot.com/

    ReplyDelete
  2. "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    அதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....

    வசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ?

    மாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது?

    தென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....

    என்னத்த சொல்ல!

    ஹூம்!!!

    ReplyDelete
  3. "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    அதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....

    வசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ?

    மாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது?

    தென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராபாத், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....

    என்னத்த சொல்ல!

    ஹூம்! இன்னும் எத்தனை காலம் தான் மக்கள் காதில் பூ சுற்றுவார்களோ!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...