> என் ராஜபாட்டை : கேணி இலக்கிய கூட்டம்

.....

.

Friday, April 29, 2011

கேணி இலக்கிய கூட்டம்

 
  கேணி இலக்கிய கூட்டம்  
       




பத்திரிகையாளர் / நாடகாசிரியர் ஞாநி தன்னுடைய வீட்டில் சென்ற மாதம் முதல் கேணி - இலக்கிய கூட்டத்தை நடத்துகிறார். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இம்மாத நிகழ்வு 12.07.2009 அன்று நடைபெற்றது. கூட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கியது. படைப்பாளிகள், வாசகர்கள் என சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஞாநி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நானும் பாஸ்கர் சக்தியும் மட்டுமே கேணியின் அமைப்பாளர்கள். இந்த வீட்டுக்கு குடிவந்த பின் வீட்டின் பின்புறம் கேணி, கேணியைச் சுற்றி நிறைய காலியிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியுற்று, படைப்பாளிகளும், வாசகர்களும் சந்தித்து இலக்கியம் பற்றி உரையாடவேண்டும் என்ற ஆர்வத்தில் கேணி
அமைப்பை உருவாக்கினோம், என கூறி தன்னுரையை நிறைவு செய்தார்.

தனக்கு பிடித்த சிறுகதைகள் குறித்து பேச எழுத்தாளர் பிரபஞ்சன் வந்திருந்தார். நீர்வளம் மாறாத பூமியான புதுச்சேரிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர், என தன் பேச்சை தொடங்கினார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் தந்தை என்னை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். இளமையிலேயே பல நூல்களை வாசிக்க தொடங்கிவிட்டேன். பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட பல நூல்களை வாசித்தேன். குறிப்பாக மாப்பசானின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண் பெண் உறவு பற்றி இயல்பாக கூறியது எனக்கு பிடித்தது. நம்மூரில் ஆண் பெண் உறவு பற்றி பல கற்பிதங்கள் உள்ளன. அது புனிதமானதுமில்லை, மோசமானதுமில்லை இயல்பானது என கூறினார். புதுமைப்பித்தனின் இது மெஷின் யுகம், தஞ்சை பிரகாஷின் மீனின் சிறகுகள், தி.ஜானகிரானின் தவம், லியோன் பட்வாங்கரின் சர்வாதிகாரின் மூளை, ஆல்பெயர் மெம்ய்ன அந்நியன், டால்ஸ்டாய் டாட்டாவஸ்கி, மாயாவஸ்கி என பலரின் படைப்புகளும் என்னை நெகிழச் செய்தன.
தமிழில் சுமார் 30 பேர் மிகச்சிறந்த சிறுகதை படைப்புகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில், இந்தியாவில், உலக நாடுகளில் பலரின் படைப்புகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். அதனால்தான் என்னோடு புறப்பட்டவர்கள் பலர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பின்பும் என்னால் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. தமிழில் இளம் படைப்பாளிகளின் முதல் தொகுப்பே மிகச்சிறந்ததாக விளங்குகிறது. அனைவரும் சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் நல்லது மட்டுமல்ல கெட்டதும் உள்ளது.
சங்க இலக்கியம் மேட்டுக்குடி மக்களின் காதல், வீரம், ஈகை பற்றி மட்டுமே பேசுகிறது. எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலை பற்றி இலக்கியத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் ஈழத்திற்கு நான் சென்றதே இல்லை, அனுபவம் இல்லாமல் படைக்க கூடாது என்பதனால் என்னால் ஈழம் பற்றிய படைப்பை படைக்க முடியவில்லை.

இந்தி எதிர்ப்பு போராட்டம், கீழவெண்மணி படுகொலை பற்றி இதுவரை ஏதும் பதிவுகள் இல்லை. அந்த வரிசையில் ஈழமும் சேர வேண்டாம் என்றே விரும்புகிறேன். உங்களுடன் கலந்துரையாடியதனால் நானும் பல கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சி எனக்கு நிறைவை தருகிறது என கூறி பிரபஞ்சன் தன் உரையை நிறைவு செய்தார். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தன் நன்றியுரையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கேணி அமைப்பின் முதல் மாத நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி :www.thamizhstudio.com

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...